டினேஸ்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கன மழையினால் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன். விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பல நாட்களாக கடும் வரட்சி நிலவிவந்த நிலையில் சனிக்கிழமை தொடக்கம் கல்முனையில் கடும் மழை பெய்துவருகின்றது.
இதன் காரணமாக கல்முனை நகரிலுள்ள பல வீதிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. குறிப்பாக கல்முனை பொலிஸ் நிலைய வீதி மற்றும் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் அமைந்துள்ள பிரதான வீதி ஆகியவற்றில் வெள்ளநீர் தேங்கி நிற்கின்றதை காணக்கூடியதாக அமைந்தது.
இதனால் பயணிகள் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
வீதிகளில் பாயும் வெள்ளநீரினால் இங்குள்ள அரச அலுவலகங்கள் சிலவற்றிலும் நீர்தேங்கியுள்ளது. கல்முனை பிரதான தபால் நிலையத்தில் வெள்ளநீர் முற்றாக சூழ்ந்துள்ளதுடன் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டே செல்கின்றார்கள்.