2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்த மோசடி இடம்பெற்றது.
மூன்று வருடங்களுக்கு முன்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் பதவி வகித்தபோது, 30 வருடங்களில் முதிர்ச்சியடையும் பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதாக அறிவித்தார்.
ஏலத்தின் நிறைவில் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 20 பில்லியன் ரூபா வரை முறிகளை விநியோகிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தீர்மானித்தார்.
மத்திய வங்கி அதிகாரிகளின் எதிர்ப்பினால் அது 10 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.
10 பில்லியனுக்கும் அதிகமான நிதி, 12.05 எனும் வழமைக்கு மாறான வட்டி வீதத்திற்கு அமைவாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அப்போதைய நடைமுறை வட்டி வீதம் 9.85 வீதமாகும்.
மற்றுமொரு முதல் நிலை கொள்வனவாளரான இலங்கை வங்கி, பேர்ப்பச்சுவல் நிறுவனத்திற்காக விலை மனு கோரியமை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வௌியிட்டனர்.
ஊடக வௌிக்கொணர்வு மற்றும் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளித்தார்.
கடந்த அரசாங்கத்தின் ஊழல் காரணமாக முறிகள் விநியோக நடைமுறையில் தாம் மாற்றத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.
டியூ குணசேகர தலைமை தாங்கிய கோப் குழு, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் அந்தக் குழு கலைக்கப்பட்டு, விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.
முறிகள் ஏலத்தின் போது பிரதமர் வழங்கிய ஆலோசனைக்கமையவே செயற்பட்டதாக அர்ஜூன மகேந்திரன், டியூ குணசேகரவின் கோப் குழுவிற்கு தெரிவித்ததாக தகவல் வெளியானது.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
அந்த கோப் குழு அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்குறிப்பிட்டனர்.
அடிக்குறிப்புகள் பரிந்துரைகளில் தாக்கம் செலுத்தியதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.