உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது ஒரு குடும்பப் பலப்பரீட்சை பார்க்கின்ற தேர்தல்ல. இது முழு மத்திய வங்கியையும் சுரூட்டிக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டை விட்டும் விரட்டுவதற்கானதொரு தேர்தலாகும் என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும், மாபெரும் பொதுக்கூட்டமும் நேற்று (29) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. இதல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முழு மத்திய வங்கியையும் சுரூட்டிக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டை விட்டும் தூக்கி எரிவதற்கு  மக்கள் கிளர்ந்துவிட்டார்கள். அவரை விரட்டுவதற்கும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமான ஒரு தேர்தலையே சிங்கள மக்கள் வேண்டிநிற்கின்றனர். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களை தேசிய காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைக்கும்.தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட மக்கள் இன்று தேசிய காங்கிரஸில் சேர்ந்து வருகின்றனர். இதனால் எமது கட்சி வட, கிழக்கு மாகாணங்களில் பல வளர்ச்சிப் படிகளை கண்டு வருகின்றது. 

இந் நட்டில் வாழும் மூவின சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வது காலத்தின் தேவையாகும். சமூகத் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அப்போதுதான் எமக்குள்ள பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். நல்லாட்சி அரசு முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அநீதி இழைக்கும் ஆட்சியாக மாறியுள்ளது. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இலங்கையில் வாழக் கூடிய புதிய யாப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சியில் சில சுகபோகங்களுக்காக துணைபோகின்றது. ஒரு சமூகத்தை வழி நடத்துவதற்கு சிறந்த அரசியல் தேவையாக இருக்கின்றது. மர்ஹும் அஸ்ரப் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் அரசியல் ஆலோசகராகவும், வழி காட்டிகளாகவும் திகழ்ந்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் இந் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது பேரினவாதிகளின் கைக்குள் சிக்கி வாழ வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கும். அஷ்ரபின் பாசாறையில் வளர்க்கப்பட்ட நாங்கள் இனவாதம் இல்லாமல் அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அவரால் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். 

அந்த வகையில் தேசிய காங்கிரஸ் தற்போது அரசியல் பலம் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் குரலாக ஒழித்துக் கொண்டிருக்கின்றது. இதனை நசுக்குவதற்கு சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிய யாப்பு சீர்திருத்தம் நாட்டில் வாழும் மக்களை பிரிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் வாழும் தமிழ் சமூகம் தமிழ் தலைவர்களால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.

தேசிய காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளில் குதிரைச் சின்னத்தில் தனித்தும், சில உள்ளூராட்சி சபைகளில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்திலும் இணைந்து களமிறங்கியிருக்கின்றது. அதனால் நாங்கள் கிழக்கிலுள்ள அதிகமான சபைகளை கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.

(எம்.ஜே.எம்.சஜீத்)