மியன்­மாரில் இருந்து உயிர் தப்பி வெளி­யே­றிய முஸ்­லிம் அக­தி­களை, ரொஹிங்­யர்­களை அண்­மை­யில் பிக்குகளுடன் சேர்ந்து சிலர் தாக்க முற்­பட்ட சம்­ப­வத்தை, முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச உட்­ப­டப் பல அர­சி­யல் தலை­வர்­க­ள் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.

இலங்­கை­யில் இது­ போன்ற சம்­ப­வங்­க­ளைக் கடந்த காலங்­க­ளில் அதி­க­ள­வில் எதி­ர்கொண்­ட­வர்­க­ளான தமிழர்களின் தலை­வர்­கள், சம்­ப­வத்தை உட­ன­டி­யா­கக் கண்­டித்­தி­ருக்­க­ வேண்­டும். ஆனால் அது நடக்­க­வில்லை. ஒரே ஆறு­த­லாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் சபை அமர்­வில் இந்த விட­யத்தை எடுத்துக்­ கொண்டு உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார்.

மியன்­மாரில் ரொஹிங்­யர்­க­ளுக்கு எதி­ராக நடப்­பது இனச் சுத்­தி­க­ரிப்பு என்று ஐக்­கிய நாடு­கள் சபை அறி­வித்­துள்­ளது.

இனச் சுத்­தி­க­ரிப்பை எப்­ப­டிச் செய்­ய ­வேண்­டும் என்­ப­தற்­கான பால­பா­டம் போன்று மியன்­மார் படை­யி­ன­ரின் செயற்பா­டுகள் இருக்­கின்­றன என்­றும் ஐ.நா. தெரி­வித்­துள்­ளது.

அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை­யில், இலங்­கை­யில் இனப்­ப­டு­கொ­லையை எதிர்­கொண்­ட­வர்­கள், இன்­னும் அந்த ஆபத்­தில் இருந்து நீங்­கா­த­வர்­கள் ஆகிய தமி­ழர்­கள் ரொஹிங்­யர்­க­ளுக்கு தமது முழு­மை­யான ஆத­ர­வைத் தெரி­வித்­தி­ருக்க வேண்­டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தனது ருவிற்­றர் பக்­கத்­தில் கண்­ட­னம் தெரிவித்தார், மாகாண சபை­யில் ஒரு­வர் குரல் கொடுத்­தார், இவற்­றுக்­கெல்­லாம் முன்­பா­கச் சிலர் யாழ். நக­ரில் ஒன்று ­கூடி ஒரு கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்­கள் என்­ப­தற்கு மேல், தமிழ்ச் சமூ­கம் இது பற்­றிப் பெரி­தாக அலட்­டிக்­ கொண்­ட­தில்லை.

ஆனால், தமக்­குக் கொடு­மை­கள் நிக­ழும்­ போ­தும், தாம் அடக்­கு­மு­றைக்கு உள்­ளா­கும்­ போ­தும் மொத்த உல­க­மும் எழுந்து நின்று கேள்வி கேட்­க­ வேண்­டும் என்று விரும்­பு­வார்­கள்.

இப்­போ­தும் எங்­கள் பிரச்­சி­னை­யில் உலக நாடு­கள் தலை­யிட்­டுத் தீர்­வைப் பெற்­றுத் தர­வேண்­டும் என்று அழுத்­த­மாக எதிர்­பார்ப்­போம். ஆனால் அடுத்­த­வ­ருக்­குத் துயர் வரும் ­போது நமக்கு ஏன் வம்பு என்று திரும்­பிக்­ கொண்­டு ­விடுவோம்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, ரொஹிங்­யர்­க­ளுக்கு எதி­ராக பிக்­கு­கள் தலை­மை­யில் இடம்­பெற்ற அடா­வ­டி­கள் தொடர்­பில் முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரவூப் ஹக்­கீம் எழுப்­பி­யுள்ள கரி­சனை கவ­னத்­திற்­கு­ரி­யது.

இன­வா­தச் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த அரசு கொள்­கை­ய­ள­வில் தீர்­மா­னம் எடுத்­தி­ருக்­கை­யில், இது ­போன்று இன­வா­தத்­தோடு செயற்­ப­டு­ப­வர்­க­ளின் பின்­ன­ணி­யில் இருப்­ப­வர்­கள் யார் என்று விசா­ரணை நடத்த வேண்­டும் என்று சட்­டம், ஒழுங்­கு­கள் அமைச்­சர் சாகல ரத்­நா­யக்­க­வி­டம் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார்.

போருக்­குப் பின்­னர் இலங்­கை­யில் பௌத்த மேலா­திக்­கத்­தால் முஸ்­லிம்­கள் தொடர்ந்து இலக்கு வைக்­கப்­பட்­டு­ வரும் நிலை­யில், மற்­றொரு பௌத்த நாடான மியன்­மா­ரில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்ள முஸ்­லிம் அக­தி­கள் இலக்கு வைக்­கப்­பட்­ட­தன் பின்­ன­ணி­யில் இன­வா­தத்­து­டன் செயற்­ப­டு­ப­வர்­கள் நிச்­ச­யம் கண்­ட­றி­யப்­ப­ட­ வேண்­டும்.

சிங்­கள, பெளத்த வாக்­கு­க­ளுக்­காக இன்று இந்த விட­யத்­தை அரசு கண்­டு­ கொள்­ளா­மல் விடு­மா­னால், அதுவே பின்னர் இந்த அர­சின் அனைத்து நல்ல முயற்­சி­க­ளுக்­கும் ஆபத்­தாக மாறி­ வி­டும். தீர்வு முயற்­சி­கள், நல்­லி­ணக்க முயற்­சி­கள் என அனைத்­துக்­குமே ஆபத்­தாக முடி­யும்.

இன­வா­தப் பின்­ன­ணி­யில் இயங்கி, இலங்­கை­யைப் பெளத்த சிங்­கள நாடாக நிலை­நாட்ட முயற்­சிப்­ப­வர்க­ளைக் கட்டுப்­ப­டுத்த அரசு நட­வ­டிக்கை எடுக்­காத வரை­யில், நிரந்­த­ர­மான தீர்வு ஒன்று இலங்­கை­யில் ஏற்­ப­ட­வே­ போவதில்லை.

பெளத்த சிங்­கள வாக்­கு­க­ளுக்­காக இத் தகைய இன­வா­தச் செயற்­பா­டு­களை கண்­டும் காணா­ம­லும் அரசு நடந்­து­கொள்­வது எதிர்­கா­லத்­திற்­கும் பெரும் ஆபத்­தாக முடி­யும்.

எனவே இன­வா­தி­க­ளை­யும் அவர்­க­ளின் பின்­னால் இருந்து இயக்­கு­ப­வர்­க­ளை­யும் கண்­ட­றிந்து களை­யெ­டுக்­க­ வேண்டும் அரசு.